Sunday, November 28, 2010

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியாயமாக தீர்ப்பு அளிப்பதில்லை; சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!

,


முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜித் இடத்தை 'மத நம்பிக்கை'அடிப்படையில் மடத்தனமான தீர்ப்பின் மூலம், இந்துத்துவாக்களுக்கு தாரைவார்த்த நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தான் என்பதை அனைவரும் அறிவோம். அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிவழங்கும்[!] இந்த பாணியை நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்கள் விமர்சித்தார்கள். ஆனால் இப்போது அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படும் நீதி பெரும்பாலும் நீதியாக இருப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

வக்பு போர்டு தொடர்ந்த ஒரு நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ச், கியான்சுதா மிஸ்ரா இவரும் இந்த கண்டனத்தை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது:-


அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகள் குறித்து எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளது. அங்கு நீதிபதிகள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது நிறைய பேருக்கு தெரியும். ஆனால் கோர்ட்டு அவமதிப்பு என்ற பெயரில் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம் என்ற காரணத்தால் வாயைத் திறக்காமல் உள்ளனர்.

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகளில் பலர் நேர்மையற்றவர்கள். அவர்களது மகன்களும், மகள்களும் அதே கோர்ட்டில்தான் பணியில் உள்ளனர். பயிற்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவர்கள் கோடீசுவரர்களாகி விடுகிறார்கள். அவர்களது வங்கி கை இருப்பு பல மடங்கு உயர்ந்து விடுகிறது. ஆடம்பர பங்களாக்களில் வாழும் அவர்கள் விலை உயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள். சொகுசு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

நீதிபதிகள் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதால்தான் இவர்களால் கோடீசுவரர்களாக முடிகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில், டென்மார்க்கில் சில நேர்மையற்றவர்கள் உள்ளனர். என்ற வரிவரும். அதுபோல அலகாபாத் ஐகோர்ட்டிலும் சில நேர்மையற்றவர்கள் உள்ளனர்.

இத்தகைய நீதிபதிகளால் கோர்ட் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குலைந்து விடும். எனவே அலகாபாத் ஐகோர்ட்டை சீரமைத்து, சுத்தப்படுத்த வேண்டியது தலைமை நீதிபதியின் கடமையாகும். நேர்மையற்ற நீதிபதிகள் மீது தயவுதாட்சன்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.

நீதியரசர்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனின் மனதில் உள்ள வார்த்தையாகும். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய நீதியரசர்களை வாழ்த்துகிறோம்; வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் வெறும் கண்டனம் என்பதோடு நீதியரசர்கள் நின்றுவிடாமல், நீதி செலுத்தும் இடத்தில் அமர்ந்துள்ள 'கருப்பு ஆடு'களை இனம்கண்டு களை எடுக்க உச்சநீதிமன்றம் மூலம் முன்வரவேண்டும். ஏனெனில் அலகாபாத் மட்டுமன்றி பெரும்பாலான நீதிமன்றங்களின் நிலை இதுதான். பணம் கொடுத்தால் பாக்தாத் சதாமுக்கும் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கும் புண்ணியவான்களும் நீதிமன்றத்தில் உண்டு. உண்மைக்கு பகரமாக நீதி வழங்குபவர்களை ஊக்குவித்து,
'உறை'க்கு பகரமாக [அ]நீதி வழங்குபவர்களை கடுமையாக தண்டிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கோர் நம்பிக்கை பிறக்கும்.

மேலும், நீதியரசர்களின் கண்டனத்திற்கு இலக்காகியுள்ள அதே அலகாபாத் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதியான தீர்ப்பை பாபர்மஸ்ஜித் வழக்கில் வழங்கியுள்ளதை உச்சநீதிமன்றம் அவதானித்திருக்கும் என நம்புகிறோம். அலகாபாத் நீதிமன்றம் தந்த வேதனைக்கு அருமருந்து அளித்து முஸ்லிம்களை தேற்ற வேண்டிய கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் இறுதியாக உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை வைத்து, அநீதிக்கு பின்னும் அமைதி காக்கிறார்கள்.

அலகாபாத் நீதிமன்றத்தின் அநீதியை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், நீதிக்கு சான்றாக திகழுமா? என்பதே பாபர் மஸ்ஜித் வழக்கின் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். [அல் குர்ஆன்;5:8 ]
ஆக்கம் -முகவை அப்பாஸ்

0 comments to “அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியாயமாக தீர்ப்பு அளிப்பதில்லை; சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!”

Post a Comment

 

Mr.Mobile Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates